புதுடெல்லி: தமிழகத் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, திரைப்பட நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு இந்திய அதிபர் திரௌபதி முர்மு பத்ம பூஷண் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
மே 27ஆம் தேதி, டெல்லியில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருது நிகழ்ச்சியில் மொத்தம் 68 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில் எனப் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது இந்திய அரசு.
இம்முறை ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருது அளிக்கப்பட்டன. பத்ம பூஷண் விருதுக்கு 19 பேர், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியன்று, நடிகர் அஜித் உட்பட 71 பேருக்கு அதிபர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்திருந்தார்.
மீதமுள்ள 68 பேருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (மே 27) பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குருவாயூர் துரை, புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர், மறைந்த குமிதினி லாகியா, காலஞ்சென்ற சாரதா சின்ஹா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை அதிபர் வழங்கினார்.
கேரளாவைச் சேர்ந்த காற்பந்து விளையாட்டு வீரரும் நடிகருமான விஜயன் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் அறக்கட்டளை தலைவரான, சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் தமிழர் சேதுராமன் பஞ்சநாதனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.