புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் 2025- 26ஆம் ஆண்டிற்கான மத்திய வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) சனிக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பீகார் மாநிலத்துக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பீகாரில் தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆதரவில் ஆட்சியைத் தக்கவைத்தது.
இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ஒரு மணி நேரத்தில் அம்மாநிலத்துக்கு ஏழு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், மூன்று புதிய பசுமை விமான நிலையங்கள், பாட்னா விமான நிலைய மேம்பாடு, ஐஐடி பாட்னா விரிவாக்கம், உணவு பதனிடும் பூர்வோதயா திட்டம் செயலாக்கம், மாக்னா [தாமரை விதை] உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம், மிதிலாஞ்சல் பகுதியில் மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி உள்ளிட்ட திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.