ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை மாணவ, மாணவியர் வழக்கம்போல் பாடம் படித்துக்கொண்டிருந்தனர். காலை 8.45 மணி அளவில் பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இந்தச் சம்பவத்தில் பள்ளி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
விபத்துகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், கிராம மக்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவ-மாணவியர், ஆசிரியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்தக் கட்டட விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 மாணவ, மாணவியர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.