விசாகப்பட்டினம்: இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த மகளிர் இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளில் இத்திட்டமும் ஒன்று என்றார் அவர். அதை நடப்புக்குக் கொண்டு வர ஆந்திர அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்நிலையில், ஆந்திர மாநில அரசு பேருந்துப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் துவாரகா திருமலராவ், திருப்பதி அடுத்துள்ள வெங்கடகிரி வாகாடு பேருந்து பணிமனையை ஆய்வு செய்தார்.
“மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டத்துக்காக தற்போதைய நிலவரப்படி 750 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 600 பேருந்துகள் வர உள்ளன. அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
“மொத்தம் 11,000 பேருந்துகளில் 74 விழுக்காடு பேருந்துகள் மகளிர் இலவசப் பயணத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட உள்ளன. இத்திட்டம் ஒருங்கிணைந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் குடிநீர், கழிவறை, மின்விசிறி, இருக்கை வசதிகள் ஆகியவை செய்து தரப்படும்,” என்று திருவாட்டி துவாரகா திருமலராவ் தெரிவித்தார்.