சென்னை: வெற்றியை நெருங்கும் நேரத்தில் பதற்றமோ, அசதியோ கூடாது. இனிதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓட வேண்டும். பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. வாக்குச்சாவடி வாரியாகச் சரிபார்க்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், காணொளி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியபோது, “தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் (SIR) பணிகளை அவசரகதியில் ஆரம்பித்த போதே, இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும், தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று எச்சரித்தோம்.
“உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தோம். அதன்படியே, எஸ்.ஐ.ஆர் மூலம் 15 சதவீதம் பேர், அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவுப் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இடம் பெயர்ந்தவர்கள் என்று மட்டும் சுமார் 66 லட்சம் பேரை நீக்கியுள்ளனர்.
“குறிப்பாக 168 தொகுதிகளில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதை நாம் வாக்குச்சாவடி வாரியாகச் சரிபார்க்க வேண்டும். உதாரணமாக, கும்மிடிப்பூண்டியில் முதல் வாக்குச்சாவடியில் 40 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலமாகச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். அதேபோல், மற்ற 3 பேரையும் எதற்காக நீக்கினார்கள் என்று சரிபார்க்க வேண்டும். நாம் களத்தில் முழுமையாக இறங்கிப் பணி செய்கிறோம்.
“மறுபுறம் அதிமுகவும் பாஜகவும் களத்துக்கே வரவில்லை. அதனால்தான் நாம் சந்தேகப்பட வேண்டியுள்ளது. எனவே, நீக்கப்பட்டதில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா எனக் கவனமாகப் பார்க்க வேண்டும்.
“நான் வாக்குச்சாவடி வாரியாக உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தால்கூட, வாக்காளர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அனைத்து மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்களின் பொறுப்பாகும்.
“ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டவர்கள் பட்டியலும் அதில் யாரெல்லாம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர்கள் என்ற விவரமும் இன்றைக்குள் (டிசம்பர் 22) மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
“விவரங்களை முழுமையாகச் சரிபார்த்து விடுபடல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவதையும் கவனிக்க வேண்டும். போலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“இதுதவிர, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,032-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பூத் எண் மட்டும் மாறிய வாக்குச்சாவடிகளுக்கு, ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.ஏக்கள் தொடர வேண்டும்.
“புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்குப் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். நம்மை நேர்வழியில் வீழ்த்த முடியாத எதிரிகள், குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள். அதற்குத் கடுகளவும் இடம் தரக்கூடாது.
“வெற்றியை நெருங்கும் நேரத்தில் பதற்றமோ, அசதியோ கூடாது. இனிதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓட வேண்டும். களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரை கவனம் சிதறாமல் உழையுங்கள்,” இவ்வாறு அவர் பேசினார்.

