போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
ஜாபுவா மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 4) அதிகாலை அந்த விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை கூறியது.
விபத்தில் மாண்டவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குவர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
மெஹ்நகர் தாலுகாவுக்கு ஒட்பட்ட ஷிவ்கார் மஹுதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பாவ்புரா என்னும் இடத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட பின்னர் வேனில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அதிகாலை வேளையில் ஜாபுவா மாட்டத்தில் வேன் சென்றபோது, சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று அருகில் சென்றுகொண்டு இருந்தது.
சஞ்செலி ரயில்வே பாதை அருகே உள்ள தற்காலிக சாலை ஒன்றை நோக்கி திரும்பிய லாரி பாரம் தாங்காமல் ஒருபக்கமாகச் சாய்ந்து வேன் மீது விழுந்தது.
வேனில் இருந்தவர்களில் பலரும் நசுங்கினர். இந்தத் தகவல்களை ஜாபுவா காவல்துறைக் கண்காணிப்பாளர் பத்மாவிலோச்சன் சுக்லா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
விபத்து தொடர்பான விசாரணை தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.