சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 mins read
3e517077-4f8a-45cb-8873-42962654e96e
இந்திய உச்ச நீதிமன்றம். - படம்: இந்திய ஊடகம்

சண்டிகர்: சண்டிகர் மாநகர மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) உத்தரவிட்டது.

தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் ‘எக்ஸ் (X)’ எனக் குறிப்பிட்ட எட்டு வாக்குகளும் ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளருக்கு சாதகமாக வழங்கப்பட்டது.

இதன்மூலம், ஆம் ஆத்மி மாநகராட்சி கவுன்சிலட் குல்தீப் குமார் சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் துணை மேயரானார்.

அதேபோல், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹை குற்றவாளியாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

சண்டிகர் மாநகர மேயர் மற்றும் துணை மேயரை தேர்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது.

மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட 12 கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாது என்று அறிவித்து, பெரும்பான்மைக்குக் குறைவாக இடங்களை பெற்ற பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெற்றது.

அப்போது, தேர்தல் அதிகாரியிடம் சரமாரியான கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்தது. உண்மையாக பதிலளிக்கவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

அடையாளத்துக்காக எட்டு வாக்குச்சீட்டுகளில் ‘எக்ஸ்’ எனக் குறிப்பிட்டதாக தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்