சட்டமன்றத்தில் தகாத வார்த்தை; சிஐடி விசாரணை

சட்டமன்றத்தில் தகாத வார்த்தை; சிஐடி விசாரணை

2 mins read
2da85443-3e3b-4ab8-9efd-c07d6eb48f7e
சட்டமன்ற விவாதத்தின்போது அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு எதிராக சி.டி.ரவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. - படம்: இணையம்

பெங்களூரு: பாஜக எம்எல்சி சி.டி.ரவி, கர்நாடக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் ஆகியோர் தொடர்பான வழக்கை கர்நாடக உள்துறை அமைச்சு குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சிஐடி) ஒப்படைத்துள்ளது.

டிசம்பர் 19 அன்று நடந்த கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது ஹெப்பால்கருக்கு எதிராக தரக்குறைவான மற்றும் நாடாளுமன்றத்துக்கு எதிரான வார்த்தைகளை ரவி பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான காணொளிக் காட்சி, ஒலிப்பதிவு ஆதாரங்களை சிஐடி ஆய்வு செய்யும்.

தகாத வார்த்தைகளைப் பேசியதால் சி.டி.ரவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டமன்ற சபாநாயகரிடமும் காவல் நிலையத்திலும் லட்சுமி ஹெப்பால்கர் புகார் அளித்தார். டிசம்பர் 19ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட சி.டி.ரவி, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

திங்கட்கிழமை (டிசம்பர் 23) செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி ஹெப்பாகர், “நான் அதிர்ச்சியடைந்ததால், இது குறித்து இரண்டு நாட்கள்வரை அமைதியாக இருந்தேன். சி.டி.ரவியை மன்னிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து எனக்கு நடந்த அநீதியை அவரது கவனத்துக்கு கொண்டு வருவேன். அநீதிக்கு எதிராக 26 ஆண்டுகள் போராடி இந்த நிலைக்கு வந்துள்ளேன்,” என்று கூறினார்.

பாஜக தலைவர்களையும் விமர்சித்த அவர், “ஒரு பெண்ணை அவமரியாதை செய்த ஒருவரை ஆதரிக்கும் எனது பஞ்சமசாலி லிங்காயத் சமூகத்தின் தலைவர்களான பசங்கவுடா பாட்டீல் யத்னால், அரவிந்த் பெல்லாட் ஆகியோரை நினைத்து நான் வேதனையடைகிறேன். அரசியலுக்காகவும், தங்களது கட்சிக்காகவும் இப்படிச் செய்கிறார்கள்,” என்றார்.

“சி.டி.ரவிக்கு மனசாட்சி இருந்தால், அவர் தனது குடும்பத்தில் உள்ள பெண்களிடம் குற்ற உணர்ச்சியில் இருப்பதாகச் சொல்ல வேண்டும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகர்நாடகாஅமைச்சர்சட்டமன்றம்நடவடிக்கை

தொடர்புடைய செய்திகள்