தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதானி விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நூதன ஆர்ப்பாட்டம்

2 mins read
6f096403-098c-45c4-9826-58b4b6228090
“மோடியும் அதானியும் ஒன்று” என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான பணிப்பைப் பெறுவதற்காக நான்கு மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதைக் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின் ஒன்பதாம் நாளான வியாழக்கிழமை (டிசம்பர் 5), நாடாளுமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விவகாரத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் “மோடியும் அதானியும் ஒன்று” என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “அதானி குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார். ஏனெனில், அதானி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பிறகு தானும் விசாரணைக்கு உட்பட வேண்டியது இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்,” என விமர்சித்தார்.

மக்களவைக்குள்ளும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பலுக்குச் செல்ல முயன்ற ராகுல் காந்தியைத் தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அனுமதி அளிக்கவில்லை. கேள்வி நேரம் முக்கியம் என்றும் திட்டமிட்டபடி அவை நடைபெறும் என்றும் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கேள்வி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்