அண்மையில், அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவிலும், ஆசியாவிலும் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளார் கவுதம் அதானி.
2021ஆம் ஆண்டில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 43.2 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.
இந்த நிலையில் கவுதம் அதானியின் நிறுவன பங்குகளில் அதிக முதலீடு செய்திருக்கும் 3 வெளிநாட்டுக் கணக்குகளை தேசிய பங்குகள் வைப்பு நிறுவனமான என்எஸ்டிஎல் முடக்கியுள்ளதாக செய்தி வெளியானது.
இச்செய்தி வெளியானதிலிருந்து அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதனால், அதானி நிறுவன பங்குகளின் விலை குறைந்துள்ளது மட்டுமல்லாமல், கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிந்தது.
கடந்த 3 நாட்களில் அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து சரிந்ததால், கவுதம் அதானி 3 நாட்களில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார்.
இதனால், அவரது சொத்து மதிப்பு 63.5 பில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்பு, இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானிக்கும் இவருக்கும் இடையேயான இடைவெளி குறைவாக இருந்தது.
ஆனால் இந்த சரிவின் காரணமாக இடைவெளி அதிகரித்தது மட்டுமல்லாமல், ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்னும் நிலையையும் அதானி இழந்திருக்கிறார்.
உலக அளவில் 15-வது இடத்துக்கும் அதானி தள்ளப்பட்டிருக்கிறார்.
அதானியின் 2-ம் இடத்தை பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார்.