லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகத்தை நாடும் அதானி

2 mins read
fcba2e9f-9a34-4eb1-981b-8bdc71cb2ed7
கௌதம் அதானி. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் அதானி குழுமம் மீதான ரூ.2,200 கோடி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ரத்து செய்யக்கோரி அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தை அதானி தரப்பு நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, முன்னாள் தலைமை நிர்வாகி வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு தமிழகம், ஆந்திரா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் இதை அமெரிக்க வங்கிகளிடம் மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மத்திய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாக அதிகாரிகளை அதானி குழுமப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையில், அதானி சார்பில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை இந்த ஆண்டின் தொடக்கம் முதல் நடந்து வருவதாகவும் தகவல். விரைவில் இதற்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு டிரம்ப் அரசின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், அதனால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதானி தரப்பு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்