புதுடெல்லி: இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி-6’ ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைத்துள்ளது.
ஏறக்குறைய 10,000 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் என்றும் இந்த ஏவுகணை வரலாறு படைக்கத் தயாராக உள்ளது என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
‘அக்னி 6’ ஏவுகணை தொடர்பான சோதனை நடவடிக்கைகளை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் டிஆர்டிஓ தலைவர் சமீர் வி.காமத் அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில், ‘அக்னி 6’ ஏவுகணையின் துணையோடு வல்லரசு பாதையை நோக்கி இந்தியா முன்னேறுகிறது என்று பாஜக தனது அதிகாரபூர்வ சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது.
“இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளுக்குப் பக்கபலமாக இருக்கும் என்றும் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் பாஜக கூறியுள்ளது.
எதிரிகள் இந்திய எல்லைப் பகுதி வழியாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிப்பதில் ‘அக்னி 6’ ஏவுகணை முக்கியப் பங்கு வகிக்கும். உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் வரிசையில் நம்மை நிலைநிறுத்த இந்த ஏவுகணை உதவும் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சக்தியைக் கொண்டுள்ளன.
இப்போது, அந்த வரிசையில் இந்தியாவும் இடம்பெற உள்ளது.

