காந்திநகர்: கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
மேலும், அந்த விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 260 ஆக அதிகரித்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ எரிந்து காணப்பட்டதால், அவர்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமிருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இந்த மரபணு மாதிரிகள் மூலம் உயிரிழந்த நபர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான பணிகளைக் குஜராத் சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டது.
இதன்படி 260 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனிடையே, ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பயணிகளின் உடல்களும், மரபணுச் சோதனையில் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இருவரின் உடல்கள் மாறி வந்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்களுக்குக் கிடைத்த உடல்களுடன் மரபணுச் சோதனை முடிவுகள் பொருந்தவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சவப்பெட்டியில் இரண்டு வெவ்வேறு நபர்களின் உடல் பாகங்கள் இருந்திருக்கலாம் எனவும் அதனால் மரபணுச் சோதனை முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.