சென்னை: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக சென்னை தாம்பரம் அருகே அவசரமாகத் தரையிறங்கியது.
சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இசட்ஏ 1420 திங்கட்கிழமை (ஜூலை 6) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, சென்னை வண்டலூரை அடுத்த கீரப்பாக்கத்தில் அந்த ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியது.
இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அது ராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
விமானப்படை அதிகாரிகள் வந்து ஹெலிகாப்டரை ஆய்வு செய்து அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியின் சுற்றுவட்டார மக்களும் விமானப் படை ஹெலிகாப்டரை வியப்புடன் பார்வையிட்டுச் சென்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

