அகமதாபாத்: பெருந்துயரை ஏற்படுத்திய ஏர் இந்தியாவின் ஏஐ171 விமான விபத்தையடுத்து, அகமதாபாத் ராணுவப் பாளையத்தில் பெரிய அளவிலான ரத்த நன்கொடை முகாமிற்கு இந்திய ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.
விபத்தில் காயமடைந்தோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், ஏறத்தாழ 300 ராணுவ வீரர்கள் தாங்களாக முன்வந்து ரத்த நன்கொடை அளித்தனர்.
படைப்பிரிவுத் தளபதிகள் பலரும் ரத்த நன்கொடை அளித்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தனர்.
அவ்வாறு பெறப்பட்ட ரத்தம், தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்வதும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாண்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை அகமதாபாத் பொது மருத்துவமனை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 192 குடும்பத்தினரின் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதை அம்மருத்துவமனை உறுதிப்படுத்தியது. மரபணு அடிப்படையில் மாண்டவர்களை அடையாளம் காணும் பணிக்கு உதவும் வகையில், 70 - 80 மருத்துவர்கள் உடற்கூறாய்வுப் பணிக்குக் கைகொடுத்து வருகின்றனர்.