அகமதாபாத்: ஏர் இந்தியா விமானம் AI171 இந்தியாவின் அகமதாபாத் நகரில் வியாழக்கிழமை (ஜூன் 12) விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 265 பேர் மரணமடைந்துள்ளனர்.
உயிரிழந்தோரில் விமானத்தில் இருந்தவர்களும் நிலத்தில் இருந்தவர்களும் அடங்குவர்.
அவ்விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியுள்ளார். மேலும், விமானத்தின் கறுப்புப் பெட்டி சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதற்கு முந்தைய இறுதித் தருணங்களை மீண்டும் கட்டமைக்க அதிகாரிகளுக்கு உதவுவதில் இந்த கண்டுபிடிப்பு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
இந்த போயிங் 787-8 டிரீம்லைனர் ரக விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை அறிய விமானத்துறை வல்லுநர்கள் சம்பவம் பதிவான காணொளிகளை ஆராய்கின்றனர். சம்பவம் குறித்த அதிகாரபூர்வ விசாரணையை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த விஸ்வாஷ்குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் உயிர் தப்பினார். விமானத்தின் 11A என்ற இருக்கையில் அவர் இருந்ததாக அவசர உதவி மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 40 வயது ரமேஷ் இந்தியாவில் தனது குடும்பத்தைச் சந்தித்த பிறகு பிரிட்டனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
ரத்தக் கறை படிந்த வெள்ளை சட்டை, கறுமை நிறம்கொண்ட காற்சட்டை அணிந்த ஆடவர் ஒருவர் சாலையில் நொண்டிக்கொண்டு சென்றதும் மருத்துவ உதவியாளர் ஒருவர் அவருக்கு உதவியதும் இந்திய செய்தி ஒளிவழிகளில் காண்பிக்கப்பட்ட காணொளிகளில் தெரிந்தன. அந்தக் காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டவை.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆடவரின் முகத்தில் காயங்கள் காணப்பட்டன. அவருக்குக் குறுந்தாடியும் இருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு திரு விஸ்வாஷ்குமாரின் படங்கள் வெளியாயின. சம்பவ இடத்தில் காணப்பட்ட ஆடவர் திரு விஸ்வாஷ்குமாரைப் போல் தெரிந்தார்.
அந்தக் காணொளிகளில் தெரிந்த காட்சிகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உடனடியாகச் சரிபார்க்க முடியவில்லை.