சிக்கலில் ஏர் இந்தியா; தொழில்நுட்பர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

சிக்கலில் ஏர் இந்தியா; தொழில்நுட்பர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

1 mins read
353c8315-b34d-4cfb-9709-858f95044d4f
ஏர் இந்தியா விமானிகளும் கடந்த வாரம் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருந்தனர். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: விமானத் தொழில்நுட்பர்கள் இம்மாத இறுதியில் வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தங்கள் நல்வாழ்வு, பணியில் வளர்ச்சி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஏஐ பொறியியல் சேவைகள் நிறுவன’ பணியாளர்கள் ஏப்ரல் 23ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதன் தொடர்பில் அனைத்திந்திய விமானப் பராமரிப்புப் பொறியியல் தொழிற்சங்கம், தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஏப்ரல் 8ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது.

வேலைநிறுத்தத்தால் ஏற்பட வாய்ப்புள்ள சேவை இடையூறுகளைத் தவிர்க்க வேண்டுமெனில், பிரச்சினைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி நிர்வாகத்திடம் விமானத் தொழில்நுட்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக ஏர் இந்தியா நிறுவனப் பேராளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிக எண்ணிக்கையிலான விமானிகள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததால் விஸ்தாரா விமான நிறுவனம் கடந்த வாரம் அதிகமான விமானச் சேவைகளை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதிகமான பணியால் களைப்பு, சம்பள வெட்டு போன்ற காரணங்களுக்காக விஸ்தாரா விமானிகள் மருத்துவ விடுப்பு எடுத்ததாகக் கூறப்பட்டது.

ஏர் இந்தியா உரிமையாளரான டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் கூட்டு நிறுவனமே விஸ்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, விஸ்தாரா விமானிகளைப்போல ஏர் இந்தியா விமானிகளும் கடந்த வாரம் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருந்தனர். அதிக வேலை வாங்கிவிட்டு, குறைந்த ஊதியம் தருவதாக அவர்கள் குரல் எழுப்பியிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்