புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சேவைகள் இன்னும் இரண்டு நாள்களில் வழக்க நிலைக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஒரே நேரத்தில் 300 ஊழியர்கள் திடீர் விடுப்பு எடுத்தனர். இதனால் 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 25 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.
மேலும், ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவரும் வியாழக்கிழமை (மே 9) மாலை 4 மணிக்குள் மீண்டும் பணியில் சேர வேண்டும் என நிர்வாகம் கெடு விதித்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தொழிலாளர் ஆணையம் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகத்துக்கும், ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. 25 ஊழியர்களின் பணி நீக்க உத்தரவையும் திரும்பப் பெற்றது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
இந்த சுமுகமான பேச்சுவார்த்தையை அடுத்து ஊழியர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப்பெற்றதாக விமானப் போக்குவரத்து துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.