புதுடெல்லி: புதுடெல்லியிலிருந்து இந்தூர் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இயந்திரங்களில் ஒன்று தீப்பற்றியதாக அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது.
ஏஐ2913 என்ற அந்த விமானம் டெல்லியிலிருந்து இந்தூருக்குப் புறப்பட்டபோது, வலது இயந்திரம் தீ விபத்துக்கான எச்சரிக்கையை விமானக் குழுவினர் பெற்றனர். இதனை அடுத்து, வழக்கமான நடைமுறைகளின்படி, விமானிகள் பாதிக்கப்பட்ட இயந்திரத்தை நிறுத்தி விமானத்தை டெல்லிக்குத் திருப்பினர்.
விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக ஏர் இந்தியா தனது அறிக்கையில் குறிப்பிட்டது. பயணிகள் இந்தூருக்குச் செல்லும் மற்றொரு சேவைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்த ஏர் இந்தியா, நடந்த அசெளகரியத்திற்கு வருந்துவதாகக் கூறியது.
விமானப் பயணிகள், பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முதன்மை தருவதாகவும் அந்த விமான நிறுவனம் தெரிவித்தது.