கொச்சி: கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இயந்திரத்தில் திடீரென எண்ணெய்க்கசிவு ஏற்பட்டதையடுத்து, அது மீண்டும் கொச்சி அனைத்துலக விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
‘போயிங் 737’ ரகத்தைச் சேர்ந்த ‘IX 415’ என்ற அந்த விமானம், வானில் ஏறத்தாழ 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் முதல் இயந்திரத்தில் எண்ணெய் அளவு அதிவேகமாகக் குறைவதை விமானிகள் கவனித்தனர்.
உடனடியாக இயந்திரத்தின் அழுத்தத்தைப் பரிசோதித்தபோது ஆபத்தான கட்டத்தை எட்டியதை அடுத்து, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அதன் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, விமானத்தின் கட்டுப்பாட்டைத் திறம்படக் கையாண்ட விமானிகள், ‘ஃபோர்டெக்’ எனப்படும் மதிப்பீட்டு முறையைப் பின்பற்றிப் பயணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்தனர்.
மேலும், உடனடியாக கொச்சி விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, விமானத்தை மீண்டும் கொச்சிக்கே திருப்புவதாக அறிவித்தனர்.
பயணிகள் அனைவரும் எவ்விதக் காயமும் இன்றி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


