புதுடெல்லி: ‘ஏர் இந்தியா’ நிறுவனம் கிட்டத்தட்ட 3,500 கோடி ரூபாய் (513.68 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிலான விமான மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ளது.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இத்திட்டத்தின் கீழ், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பு கொண்ட அதன் விமானங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன், அதன் உட்புறங்களில் தொழில்நுட்ப வசதிகளும் மறுசீரமைக்கப்படும் என்று அதன் அறிக்கை தெரிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட 26 போயிங் பி787 - 8 ரக விமானங்களின் முதல் தொகுதி மறுசீரமைப்பு, மேம்பாட்டுக்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ‘போயிங்’ விமான நிறுவனத்துக்குக் கடந்த ஜூலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இரண்டாவது தொகுதி விமானங்கள் அக்டோபரில் அனுப்பப்பட உள்ளன. இந்த விமானங்கள் டிசம்பர் மாதத்திற்குள் சேவைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி787 - 8 ரக விமானங்களுக்கான மறுசீரமைப்பு திட்டம், அடுத்த இரண்டு ஆண்டுக்குள் நிறைவடையும்.
வணிக வகுப்பு, பிரீமியம் எகானமி மற்றும் எகானமி வகுப்புகளுக்கு புதுப்பிக்கப்பட்ட உட்புறங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன.
மேலும், இந்த மறுசீரமைப்பு திட்டம் அதன் 777-300 இ.ஆர். 13 விமானங்களுக்கும் பி787-8 ரக 26 விமானங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.