புதுடெல்லி: விமானத்தை இயக்கிய பின்னர் நடத்தப்படும் வழக்கமான ஊக்க மருந்துப் பரிசோதனையில் ஏர் இந்தியா விமானி ஒருவர் தோல்வி அடைந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் தாய்லாந்தில் புக்கெட் நகரிலிருந்து புதுடெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரெனக் குலுங்கியது. இதனால் அந்த விமானத்தில் இருந்த சில பயணிகளும் விமானப் பணியாளரும் காயமடைந்தனர்.
ஓரிரு நொடிகளில், ஏறக்குறைய 300 அடி கீழே இறங்கியதால் விமானம் குலுங்கியதாகக் கருதப்படுகிறது. எனினும், குறித்த நேரத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.
அதன் பின்னர் விமானிகளுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்துப் பரிசோதனையின்போது தலைமை விமானி போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து இத்தகவல் கிடைத்ததாக என்டிடிவி தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு சோதனை முடிவு வெளிவந்த பிறகே எதையும் உறுதிசெய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சோதனை முடிவுகள் இன்னும் தங்களுக்குப் பகிரப்படாததால், அதன் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு குறிப்பிட்ட விமானம் அல்லது செயல்பாட்டுச் சம்பவத்தையும் சாராமல், பயணிகள் விமானப் போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்க, ஏர் இந்தியா தனது விமானப் பணியாளர்களுக்குத் தவறாமல் போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விசாரணை முடியும் வரை இரு விமானிகளும் விமானப் பணிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


