பெங்களூரு: கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஐந்து வயதுச் சிறுமியிடமிருந்து 20 கிராம் தங்க நகையை விமானப் பணிப்பெண் திருடியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா முகர்ஜி என்ற பெண், தனது இரு மகள்களுடன் சில நாள்களுக்கு முன்னர் இண்டிகோ விமானத்தில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார்.
அந்த விமானத்தின் பணிப்பெண்ணான அதிதி அஷ்வினி சர்மா, பிரியங்காவின் மூத்த மகளைக் கழிவறைக்கு அழைத்துசென்றார்.
திரும்பிவந்த போது, அச்சிறுமியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இந்நிலையில் அந்தப் பணிப்பெண் தன் குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் திருடி விட்டதாக பிரியங்கா முகர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
“திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற விமானத்தில் ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். இதுபோன்ற விஷயங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் விசாரணைகளை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்து வருகிறோம்,” என இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.