புதுடெல்லி: தனது குடும்பத்தினருடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற நடிகர் அஜித் குமார், அதிபர் திரெளபதி முர்முவிடம் இருந்து பத்ம பூஷன் விருதினை திங்கட்கிழமை (ஏப்ரல் 28) பெற்றுக்கொண்டார்.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
சமூக சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களைக் கௌரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
நடிகரும் கார் பந்தயத்தில் ஆர்வம் உள்ளவருமான நடிகர் அஜித் குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்தது.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் அதிபரிடமிருந்து பத்மபூஷன் விருதை அஜித் பெற்றுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அஜித் வெளியிட்ட அறிக்கையில், “இந்த மதிப்புமிக்க கௌரவத்திற்காக மாண்புமிகு அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. இத்தகைய ஒரு மட்டத்தில் அங்கீகரிக்கப்படுவது பெரும் பாக்கியம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.