மும்பை: பல்வேறு நாடுகளில் பரவியுள்ளதாகக் கருதப்படும் ‘எச்எம்பிவி’ கிருமித்தொற்று காரணமாக இந்தியாவின் பிரபல தொழிலதிபர்கள் கௌதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகிய இருவருக்கும் 52 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகேஷ் அம்பானி தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடத்தில் உள்ளார்.
கௌதம் அதானி ஆசியாவின் இரண்டாவது பணக்காரத் தொழிலதிபராக உள்ளார். மேலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இவருக்கு 19வது இடம் கிடைத்துள்ளது.
‘எச்எம்பிவி’ தொற்றுப் பரவல் காரணமாக சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பல்வேறு தொழில் நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.
இதன் எதிரொலியாக ஆசியாவின் ஆகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 2.59 பில்லியன் டாலர் அளவு, அதாவது ரூ.22,000 கோடிக்கு மேல் குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் குறியீட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அம்பானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு இந்தியப் பங்குச் சந்தையில் 2 விழுக்காடு குறைந்ததே இதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதானியின் சொத்து மதிப்பானது 3.53 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ.30,000 கோடிக்கு மேல் குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தரவுகள் தெரிவிக்கின்றன.