விஜயவாடா: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான அம்பதி ராயுடு, 38, அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராயுடு, வியாழக்கிழமையன்று (டிசம்பர் 28) முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதனையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமது சொந்த ஊரான குண்டூர் அல்லது மசூலிப்பட்டினத்தில் இவர் போட்டியிடலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அல்லது 2024ல் நடக்கவுள்ள ஆந்திர மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இவர் களமிறங்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
ராயுடுவின் வருகை இளையர்கள் பலரைத் தங்களது கட்சியின்பால் ஈர்ப்பதாக அமையும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைமை நம்புகிறது.
இவ்வாண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளுடன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வுபெறுவதாக ராயுடு அறிவித்தார். அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் தாம் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.