புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் தொடர்பாக வெளியிட்ட கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) நாடு முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசியல் சாசனம் குறித்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது பழக்கமாகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்.
“அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்,” எனப் பேசியிருந்தார்.
அமித் ஷாவின் கருத்து தொடர்பாக மாயாவதி ‘எக்ஸ்’ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “நாட்டின் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் சுயமரியாதை, மனித உரிமை, மனிதநேயம் மற்றும் நலனுக்காக அரசியல் சாசனத்தின் அசல் புத்தகத்தை எழுதியவர் அம்பேத்கர். கடவுளைப்போல அவர் மதிக்கப்படுகிறார். அவரை அமித் ஷா அவமரியாதை செய்தது மக்களின் மனதைப் புண்படுத்துகிறது.
“மாமனிதரான அம்பேத்கர் பற்றி அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசிய வார்த்தைகளால், நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் மிகுந்த வருத்தமும் கோபமும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர்.
“இந்தப் பின்னணியில் அமித் ஷா, தான் கூறியதை திரும்பப் பெற்று, மனந்திருந்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை விடுத்தது. அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
“எனவே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 24 அன்று நாடு தழுவிய இயக்கத்தை நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. அன்றைய தினம், நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முற்றிலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும்,” என மாயாவதி கூறியுள்ளார்.