அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை வழங்கும் வகையில், ‘செயற்கை நுண்ணறிவு மருத்துவர்’ என்ற திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்துள்ளார்.
தொழில்நுட்ப உதவியுடன் மக்கள் நலனை மேம்படுத்த, பில் கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில், மக்களின் உடல்நலம் சார்ந்த தரவுகள் மின்னணு மயமாக்கப்பட்டு, திறன்பேசிகள் வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் தேவையான உணவு முறை, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவமனை சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளைக் கொண்டு சேர்ப்பதும், ஒவ்வொருவரின் உடல்நலத்தையும் தனிப்பட்ட முறையில் கண்காணித்து, வருங்காலங்களில் நோயற்ற வாழ்வை உறுதி செய்வதும் இதன் இலக்கு.
இத்திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துவதற்காக, பில் கேட்ஸ் திங்கட்கிழமை (டிசம்பர் 16) ஆந்திரப் பிரதேசம் வந்துள்ளார்.
இத்திட்டம் ஆந்திர மாநில சுகாதாரத் துறையில் ஒரு முன்னோடி முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

