மலப்புரம்: புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்ற மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், தனது இரண்டு நாள் பயணமாக கேரளாவுக்கு வருகை தந்தார்.
தனது பயணத்தின்போது, வர்த்தகம், முதலீடு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து முக்கியத் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
மலப்புரம் மாவட்டம் சேலம்பிராவில் உள்ள ஆயுர்வேத மையத்தில் தங்கியிருந்த திரு அன்வார் இப்ராகிமை, கேரள அரசின் சார்பில் அம்மாநில முதல்வர் வி.டி. சதீசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.
தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னிலக்கப் பொருளியல், உயர்கல்வி, நிலையான சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் மலேசியா, கேரளா இடையேயான கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
மலேசியாவின் வரலாற்றுப் பின்னணியில் கேரள மக்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய திரு.அன்வார், கலாசாரத் தொடர்புகளையும் வர்த்தக வாய்ப்புகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இக்கலந்தாய்வை மேலும் தொடரவும் இதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கேரளத் தலைவர்களை மலேசியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
