புதுடெல்லி: மத்திய கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரியான பிரசாந்த் சீதாராம் லோகண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவ்வாரியத்தின் புதிய செயலாளராக கல்வி அமைச்சகத்தில் பணியாற்றி வந்த வருண் பரத்வாஜ் பொறுப்பேற்றுள்ளார்.
அண்மையில் நாடு முழுவதும் மத்திய கல்வி வாரியம் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை நடத்தியது. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இம்முறை அசல் விடைத்தாள்களுக்குப் பதிலாக ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட நகல்களை மின்னிலக்க முறையில் மதிப்பீடு செய்யும் ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (ஓஎஸ்எம்) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தப் புதிய முறை அவ்வாரியத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ஒப்பந்தம் குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்திய எதிர்க்கட்சிகள் இதுகுறித்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முறைகேடு புகாருக்கு இடையே வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னாள் தலைவர் ராகுல் சிங் வேளாண்மை அமைச்சுக்கும் முன்னாள் செயலாளர் ஹிமான்ஷு குப்தா மத்திய உள்துறை அமைச்சுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

