இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது ஏராளமான ஆயுதங்களும் வெடி பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த புதன்கிழமை (ஜூலை 15) அங்குள்ள மேற்கு இம்பால் மாவட்டம், லோக்டாக் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் சுராசந்த்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு காட்டுப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதில் பல்வேறு ரகத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், 5 கையெறிக் குண்டுகள், வாக்கி-டாக்கிகள், மார்புக் கவசப்பைகள், தலைக்கவசங்கள் உள்ளிட்டவை இருந்ததாகவும் மற்றொரு நடவடிக்கையில் இரு துப்பாக்கிகளுடன் ஒருவரைக் கைது செய்ததாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
இதனிடேயே, மணிப்பூரில் நாகா, கூக்கி சமூகத்தினர் இடையேயான பதற்றம் அதிகரித்திருப்பது சட்டம்-ஒழுங்குக்குச் சவாலாக உருவெடுத்துள்ளதாக மணிப்பூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதக் காலத்தில் காவல்துறை ஏறக்குறைய 85 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தது.
அது, 214க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தி, 75க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தது. மேலும், 24 பேர் தாக்குதல்களில் கொல்லப்பட்ட நிலையில், 47 பேர் காயமடைந்தனர்.
மணிப்பூரில் சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அசாம் துப்பாக்கிப் படை முகாமை ஒரு கும்பல் சூறையாடியது. பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
மணிப்பூரில் இனமோதல் சம்பவங்களில் இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோர் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.

