புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு உதவிய ராணுவ மருத்துவருக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜூலை 6 அன்று பன்வெல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு கர்ப்பிணிப் பெண் கடுமையான பிரசவ வலியை எதிர்கொண்ட நிலையில், அவரை உறவினர்கள் ஜான்சி ரயில் நிலையத்தில் இறக்கினர்.
சூழ்நிலையை அறிந்த ஒரு பெண் டிக்கெட் பரிசோதகரும் ஒரு ராணுவ மருத்துவரும் விரைந்து வந்து அந்தக் கர்ப்பிணி பெண்ணிற்கு உதவினர்.
இந்நிலையில் ரயிலுக்காக காத்திருந்த ராணுவத்தின் மருத்துவ பிரிவைச் சேர்ந்த மேஜர் டாக்டர் ரோஹித் பச்வாலா 31, உடனே அந்த பெண்ணிற்கு ரயில்வே நிலையத்தில் குழந்தை பிரசவிக்க உதவினார்.
மருத்துவ உபகரணங்கள் ஏதும் இல்லாத நிலையில், ‘ஹேர் க்ளிப்’, ‘பாக்கெட்’ கத்தியைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் பிரசவத்தை நல்லபடியாக செய்து முடித்தார்.
ராணுவ மருத்துவர் ரோஹித் பச்வாலாவின் இந்தச் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ராணுவ தளபதி உபேந்திரா திவேதியும் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், கடமைக்கு அப்பாற்பட்டு ரோஹித் பச்வாலா அர்ப்பணிப்புடன் இந்தச் செயலை செய்ததாகவும் ராணுவ சேவையின் உன்னதமான மதிப்புகளை இது வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.