புதுடெல்லி: இந்திய ராணுவம் திங்கட்கிழமை (ஜனவரி 20) ஓர் உலகச் சாதனை புரிந்தது. ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் வாகனங்களில் அதிகமானோர் ஏறி நின்று ஆக உயரமான மனிதக் கோபுரம் (பிரமிட்) படைத்து சாதனை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஏழு மோட்டார் சைக்கிள்களில் 40 வீரர்கள் ஒருவர்மீது ஒருவர் ஏறி 20.4 அடி உயர பிரமிட் வடிவில் நின்று இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சென்றனர்.
இந்தியா கேட் பகுதியில் உள்ள கார்த்திவ்யா பாத்தில் இருந்து விஜய் சௌக் வரை அந்த மனிதக் கோபுரம் நகர்ந்து சென்றது.
இந்திய ராணுவத்தின் ‘டேர்டெவில்ஸ்’ என்னும் மோட்டார் சைக்கிள் பயணக் காட்சிக் குழுவினர் அந்தச் சாதனையைப் படைத்தனர்.
இந்தியக் குடியரசு தினம் நெருங்கி வருவதையொட்டி வீர தீர சாகசச் செயல்களில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை ஒத்திகை நடைபெற்றது.
1935ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘டேர்டெவில்ஸ்’ ராணுவ அணி இதுவரை 1,600 மோட்டார் சைக்கிள் சாசகச் காட்சிகளை நிகழ்த்தி உள்ளது. குடியரசு தினம், ராணுவ தினம் போன்றவற்றின் அணிவகுப்புகளில் அவை இடம்பெற்றுள்ளன.

