கௌஹாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த, காவல்துறை தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளின் சட்ட ரீதியான நடைமுறைகள் முடிவடைந்து, நீதிமன்றத்தின் முறையான அனுமதி பெற்றதைத் தொடர்ந்து, அந்த போதைப்பொருள்களை அதிகாரபூர்வமாக அழிப்பதற்காக மாநில அளவிலான சிறப்புத் தொடக்க நிகழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) ஏற்பாடு செய்யப்பட்டது.
கௌஹாத்தி புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சியில், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வசர்மா, அமைச்சர்கள் ஜெயந்த மல்லா பருவா, நாராயண் தேகா ஆகியோருடன் காவல்துறை உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மூட்டைகளின்மீது முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவே நேரடியாக ‘ரோடு ரோலர்’ இயந்திரத்தை ஓட்டி அவற்றை அழிக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். அடுத்த பத்து நாள்களுக்கு போதைப்பொருள் அழிப்புப் பணி தொடரும் என்று கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், அசாமை போதைப்பொருள் அறவே இல்லாத மாநிலமாக வைத்திருக்கும் பொருட்டு மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சூளுரைத்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியை அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மத்திய அரசு வழங்கிய அதிவெப்ப எரி உலை மூலம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அறிவியல்பூர்வமான முறையில் போதைப்பொருள் அழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அழிக்கப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு மொத்தம் 472.51 போடி ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது.

