கவுஹாத்தி: சட்டப்படி மணவிலக்கு செய்யாமல் முதல் மனைவி இருக்கும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமது கணவர் இன்னொரு திருமணம் செய்துகொண்டதாக அரசிடம் மனைவி முறையிட்டு உதவி கேட்டு விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட ஊழியரின் சம்பளத்தில் 20 விழுக்காடு பிடிக்கப்படும்.
“அவ்வாறு பிடிக்கப்படும் அந்தத் தொகை அவரது முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்,” என்றார்.
“அசாம் அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன்.
“அரசு ஊழியர் எவரேனும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறாமல் தனது முதல் மனைவியைக் கைவிட்டு, வேறொரு பெண்ணுடன் முறைசாரா திருமண உறவில் ஈடுபடுவது தவறு. அவ்வாறு செய்தால் சம்பளத்தில் ஒரு பகுதியை அவர்கள் இழக்க வேண்டி வரும்,” என்றும் முதல்வர் சர்மா கூறினார்.
மணவிலக்கு நடைமுறைகளை முழுமையாக முடிக்காமலேயே மனைவியை விட்டுப் பிரிந்து சென்று, வேறொரு பெண்ணுடன் வசிப்பது அல்லது திருமணம் செய்துகொள்வது போன்ற பல சம்பவங்கள் அசாம் மாநில அரசின் கவனத்திற்கு வந்ததையடுத்து, புதிய நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


