கௌகாத்தி: தன் கணவனையும் மாமியாரையும் கொலை செய்து, அவர்களின் உடல்களைச் சில நாள்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து, பின்னர் ஆற்றில் வீசிய பெண்ணை இந்தியாவின் அசாம் மாநிலக் காவல்துறை கைதுசெய்தது.
ஏழு மாதத்திற்கு முன்பே நிகழ்ந்த இந்தக் கொலைகள் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
பந்தனா கலிதா என்ற அப்பெண், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி, தன் நண்பர்கள் இருவரின் துணையோடு தன் கணவர் அமர்ஜோதி தேயையும் மாமியார் சங்கரி தேயையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“அவர்களின் உடல்களைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு, அதன்பிறகு வீட்டைவிட்டு வெளியேறினார் பந்தனா. நான்கு நாள்களுக்குப் பிறகு வீடு திரும்பிய அவர், அவ்விருவரின் உடல் பாகங்களை மேகாலயாவில் உள்ள தாவ்கி ஆற்றில் வீசினார். அந்த ஆறு, கௌகாத்தியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் இருக்கிறது,” என்ற அந்த அதிகாரி விவரித்தார்.
பந்தனாவின் நண்பர்களான அருப் தேக்கா, தஞ்சித் தேக்கா என்ற இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
மூவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.