காஷ்மீர் சுரங்கத்தில் தாக்குதல்; ஏழு பேர் உயிரிழப்பு

காஷ்மீர் சுரங்கத்தில் தாக்குதல்; ஏழு பேர் உயிரிழப்பு

2 mins read
fd58f9bb-bc7c-4ed8-8919-7092136d8086
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் கட்டுமான ஊழியர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

ஸ்ரீநகர்: இந்தியாவின் காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் ஆறு தொழிலாளர்களும் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்தனர்.

தாக்குதலில் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவரும் இரண்டு தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் நால்வர் மரணம் அடைந்தனர்.

ஐவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலை இந்திய நேரப்படி அக்டோபர் 20ஆம் தேதி இரவு 8.15 மணி அளவில் பாகிஸ்தானியப் பயங்கரவாதிகள் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் கட்டுமான ஊழியர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் மத்தியப் பகுதியில் உள்ள கன்டர்பால் மாவட்டத்தில் இத்தாக்குதல் நிகழ்ந்தது.

இதுவே காஷ்மீரில் இவ்வாண்டு நடத்தப்பட்டுள்ள ஐந்தாவது பயங்கரவாத தாக்குதல்.

முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் புதிய கூட்டணி அரசாங்கம், அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த பிறகு, காஷ்மீரில் இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்தார்.

மாண்டோரின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அவர் தெரிவித்துக்கொண்டார்.

காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தாம் வேண்டிக்கொள்வதாக எக்ஸ் தளத்தில் அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்