ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் ஆளில்லா வானூர்திகளை (டிரோன்) இந்திய ராணுவம் தாக்கியுள்ளது.
ரஜோரி மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் பாகிஸ்தான் டிரோன்கள் வட்டமடித்தன. சிறிது நேரம் இந்திய எல்லைக்குள் பறந்த அவற்றை ராணுவம் தாக்கியது. அதைத்தொடர்ந்து, அவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் சென்றன என்று ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கூறினர்.
கடந்த மூன்று நாள்களாக ஜம்மு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரிடம் (டிஜிஎம்ஓ) கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) நவ்ஷேரா செக்டார், பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட், சம்பா மாவட்டத்தின் ராம்கர் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டன.
முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு சம்பா மாவட்டத்தின் பாலோரா கிராமத்தில் டிரோன் மூலம் வீசப்பட்ட இரண்டு பிஸ்டல்கள், மூன்று மேகசின்கள், ஒரு கையெறி குண்டு ஆகியவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
இதேபோன்று ரஜோரியின் சிங்குஸ் பகுதியில் உள்ள துங்கா காலா எல்லை வழியாக பாகிஸ்தான் டிரோன்கள் நுழைந்தன. இந்திய வீரர்கள் அதனை விரட்டியடித்தனர். பாகிஸ்தானின் இத்தகைய தொடர்ச்சியான அத்துமீறல்களை அடுத்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் விழிப்புநிலையில் உள்ளனர்.

