அயோத்தி: அயோத்தி ஸ்ரீராமர் ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைமைச் செயலதிகாரியாக, இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பொறுப்புக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், தீவிர பரிசீலனைக்குப் பிறகு திரு மிஸ்ராவை உயர்நிலைக் குழு தேர்வு செய்துள்ளது.
38 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் சிறப்புறப் பணியாற்றிய ஜிதேந்திர மிஸ்ரா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது மேற்கு வான் கட்டளைப் பிரிவின் தலைமை தளபதியாகச் செயல்பட்டு நாட்டின் மிக உயர்ந்த ‘சர்வோத்தம் யுத் சேவா பதக்கம்’ பெற்றவர்.
மே 2026ல் ஓய்வுபெற்ற அவர், கார்கில் போர் உட்பட பல்வேறு முக்கியமான ராணுவ நடவடிக்கைகளில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். அயோத்தி கோயில் அறக்கட்டளையில் நிதி முறைகேடு தொடர்பான சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் நிதி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் தொழில்முறை நிர்வாகி தேவை என்ற சூழல் உருவானது.
இதையடுத்து, அமைப்பின் முதல் முழுநேரத் தலைமைச் செயலதிகாரியாக மிஸ்ரா பொறுப்பேற்க உள்ளார்.
தனது புதிய பொறுப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு ஜிதேந்திர மிஸ்ரா, “நாட்டிற்காக 43 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். ஸ்ரீராமர் கோவிலுக்கும் அவரது பக்தர்களுக்கும் சேவை செய்யக் கிடைத்த இந்த வாய்ப்பை இறைவனின் அருளாகக் கருதுகிறேன்,” எனத் தெரிவித்தார்.


