துபாய்: இந்தியாவின் இரட்டை ஒலிம்பிக் பதக்க பேட்மிண்டன் வீராங்கனையான சிந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டார்.
அவர், தங்கியிருந்த இடத்துக்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் குண்டு மழை பொழிந்து கூட்டுத் தாக்குதலை நடத்தின. அதற்குப் பதிலடியாக பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு சிற்றரசுகள் மற்றும் சவூதி அரேபியாவை ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது. .
அந்த சமயத்தில் தமது அணியினருடன் சிந்து, துபாய் விமான நிலையத்தில் தங்கியிருந்தார். அதற்கு அருகே இருந்த இடத்தில் குண்டு வெடித்ததால் அவர் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார்.
அதற்காக துபாய் விமான நிலைய அதிகாரிகளுக்கும் இந்திய தூதரக உதவிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தங்கியிருந்த இடத்துக்கு அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பதற்றமாகவும் அச்சமாகவும் இருந்ததாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புகைக்கும் இடிபாடுகளுக்கும் மத்தியில் இருந்த தம்முடைய பயிற்றுவிப்பாளர் அந்த இடத்திலிருந்து உடனடியாக வெளியேறியதாகக் கூறினார்.
“எல்லோரும் எனக்குச் செய்திகளை அனுப்பி என்னுடைய நலனை விசாரிக்கின்றனர். அனைவருக்கும், நன்றி. இது, உண்மையிலேயே ஆறுதலாக இருக்கிறது. நான் இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன். என் குழுவுடன் இங்கு சிக்கிக்கொண்டேன்,” என்று சிந்து சனிக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (March 1) வெளியிட்ட மற்றொரு பதிவில் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
ஆல் இங்கிலாண்ட் பொதுவிருதுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக சிந்து சென்றுள்ளார். அந்தப் போட்டி மார்ச் 3ஆம் தேதி தொடங்குகிறது.

