பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் இட்லி தயாரிப்பதற்கு நெகிழித்தாள் (பிளாஸ்டிக்) பயன்படுத்துவதற்குத் தடை விதித்து கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் 251 இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பெரும்பாலான உணவகங்களில் இட்லியை வேகவைப்பதற்கு துணிகளுக்குப் பதிலாக நெகிழித்தாள் பயன்படுத்துவதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தச் சூழலில், இட்லி தயாரிப்பின்போது நெகிழித்தாள் பயன்படுத்துவதற்கு தடைவிதித்து அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நெகிழித்தாளில் புற்றுநோய் காரணிகள் இருப்பதால், இது இட்லியில் சேரக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, இதைப் பயன்படுத்தக் கூடாது.
“உடல் நலனுக்கு பாதிப்பு தரக்கூடிய செயல்களை இனியும் தொடராமல் இருக்க சுகாதாரத்துறை விரைவில் அதிகாரபூர்வ உத்தரவுகளைப் பிறப்பிக்கும். அத்துடன், விதியை மீறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.