புதுடெல்லி: பொதுவாக இந்தியாவில் செயல்படும் வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன்படி, வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக் கோரித் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) திட்டமிட்டபடி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
இதில், இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, வட்டார கிராம மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 0.8 மில்லியன் ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஏற்கெனவே சனி, ஞாயிறு மற்றும் குடியரசு தினத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது செவ்வாய்க்கிழமையும் வங்கிகள் செயல்படவில்லை. இதனால் வங்கிச் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

