புதுடெல்லி: நோன்புப் பெருநாளை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வருவதால், வங்கிகளும் வருமான வரித்துறை அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 31ஆம் தேதியுடன் 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வருவதால், கணக்குகளை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் நடப்பு நிதியாண்டுக்கான வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அது தெரிவித்தது.
மேலும், சுமுகமான நிதி பரிவர்த்தனையை உறுதி செய்யும் விதமாக அரசு ரசீதுகள் மற்றும் நிதிகளைக் கையாளும் வங்கிகள், வழக்கமாக செயல்படும் நேரத்தில் கட்டாயம் செயல்பட வேண்டும் என அது கூறியது.
இதேபோல் வருமானவரித்துறை தொடர்பான பணிகள் இடையூறின்றி செயல்படவும் நாடு முழுவதும் வருமான வரித்துறை அலுவலகங்களும் நோன்புப் பெருநாளில் இயங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.