இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வாரணாசி நகரில் கிட்டத்தட்ட ரூ.300 கோடி (S$49 மி.) செலவில் புதிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தைக் கட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வரங்கம் அனைத்துலகப் போட்டிகளை நடத்த தகுதியான அரங்கமாக இருக்கும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகள் மார்ச் 24ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அடிக்கல் நாட்டு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
32 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு அரங்கம் கட்டப்படலாம். நிலத்திற்காக ஏறத்தாழ ரூ.121 கோடி இழப்பீட்டுத் தொகையாக நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர், லக்னோ என இரு இடங்களில் ஏற்கெனவே இரண்டு கிரிக்கெட் விளையாட்டு அரங்கங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

