கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் இலேசாக காயமடைந்தார்.
இவ்விபத்து புதன்கிழமை (ஜனவரி 24) நிகழ்ந்தது.
நிர்வாக மறுஆய்வுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதன்கிழமை பிற்பகலில் பூர்வ வர்தமான் மாவட்டத்திற்குத் திருவாட்டி மம்தா சென்றிருந்தார்.
பின்னர் கோல்கத்தாவிற்குத் திரும்பியபோது, இன்னொரு வாகனத்தின்மீது மோதிவிடாமல் இருக்க மம்தாவின் கார் ஓட்டுநர் திடீரென காரை நிறுத்தினார்.
இதனால், முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மம்தா காரின் முன்பக்கக் கண்ணாடியில் மோத நேர்ந்தது.
இதனையடுத்து, அவர் கோல்கத்தாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ நிபுணர்கள் அவருக்குச் சிகிச்சை அளிப்பர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

