பெங்களூரு: பாலத்தின் மேலிந்து ஒருவர் பணத்தாள்களை வீசிச் சென்ற சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இன்று செவ்வாய்க்கிழமை (24-1-2023) நிகழ்ந்தது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் வாகனவோட்டிகளும் மக்களும் வியப்பில் உறைந்துபோய் அப்படியே நிற்க, அங்கு சற்று நேரம் போக்குவரத்து நிலைகுத்தியது.
கோட் சூட் அணிந்து, கழுத்தில் சுவர் கடிகாரத்தை மாட்டியபடி மேம்பாலத்திற்கு வந்த அந்த ஆடவர், பையிலிருந்து பணத்தாள்களை அள்ளி எடுத்து, கீழிருந்தவர்களை நோக்கி வீசுவதைக் காணொளிகள் காட்டின.
இதனால், பணத்தை எடுக்க பாலத்தின் கீழே கூட்டம் முண்டியடித்தது.
அவர் வீசியதெல்லாம் பத்து ரூபாய்த்தாள்கள் என்றும் அவற்றின் மொத்த மதிப்பு மூவாயிரம் ரூபாயாக இருக்கலாம் என்றும் சம்பவத்தைக் கண்ட சிலர் கூறியதாக 'என்டிடிவி' செய்தி தெரிவிக்கிறது.
அந்த ஆடவர் ஏன் பணமழை பொழிந்தார் என்பது தெரியவில்லை.
தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த ஆடவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதனையடுத்து, சட்ட, ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தியாக வழக்கு பதிந்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

