பெங்களூரு: சிகரெட்டிலிருந்து சாம்பலைக் கீழே தட்டிவிட முயன்ற ஆடவர் 33வது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் இந்தியாவின் பெங்களூரு நகரில் நிகழ்ந்தது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீபான்ஷு சர்மா, 27, பெங்களூரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய தந்தையார் இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
தீபான்ஷின் குடும்பத்தினரும் பெங்களூரில்தான் வசித்து வருகின்றனர். ஆயினும், நகரின் இன்னொரு பகுதியில் தீபான்ஷு வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தீபான்ஷு திரையரங்கிற்குப் படம் பார்க்கச் சென்றார்.
ஆனால், அவர்கள் செல்லுமுன் படம் தொடங்கிவிட்டது. அதனால், அவர்கள் எல்லாரும் சேர்ந்து மதுக்கூடத்திற்குச் சென்றனர். பின்னிரவு 2.30 மணிக்கு அவர்கள் மோனிகா என்ற நண்பரின் வீட்டிற்குத் திரும்பினர்.
நண்பர்கள் அனைவரும் படுக்கையறைகளில் உறங்கியதாகவும் தீபான்ஷு மட்டும் வசிப்பறையிலேயே உறங்கியதாகவும் காவல்துறை தெரிவித்தது.
மறுநாள் காலையில் மாடிமுகப்பில் இருந்தபடி சிகரெட் புகைத்த தீபான்ஷு, அதன் சாம்பலைக் கீழே தட்டிவிட முயன்றபோது தவறி விழுந்து மாண்டுபோனதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.