புதுடெல்லி: இந்தியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிடாமல் இருக்கும் நோக்கில், கிலோ 25 ரூபாய் என்ற விலையில் ‘பாரத்’ அரிசியை விற்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய வேளாண்மைக் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு (நஃபெட்), தேசிய கூட்டுறவுப் பயனீட்டாளர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்), நடுவண் அங்காடி ஆகியவற்றின் கிளைகளில் ‘பாரத்’ அரிசி விற்கப்படும்.
ஏற்கெனவே ‘பாரத்’ என்ற வணிக முத்திரையுடன் கோதுமை மாவையும் பருப்புகளை அரசாங்கம் விற்று வருகிறது.
கடந்த நவம்பரில் தானியங்களின் விலை 10.27 விழுக்காடு கூடியதை அடுத்து, அம்மாதத்தில் உணவுப் பணவீக்கம் 8.70 விழுக்காடு உயர்ந்தது. அதற்கு முந்திய மாதத்தில் இது 6.61 விழுக்காடாக இருந்தது.
பயனீட்டாளர்கள் தங்களது மொத்த செலவில் கிட்டத்தட்ட பாதி உணவிற்காகச் செலவிடுகின்றனர்.
இந்திய உணவுக் கழகம், இணையவழி ஏலம் மூலமாக பொதுச் சந்தையில் கோதுமையை அதிகம் இறக்கினாலும், அதனால் விலை சற்றே குறைந்துள்ளது என ‘எக்கனாமிக் டைம்ஸ்’ செய்தி குறிப்பிடுகிறது.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், உணவுப்பொருள்களின் விலை அதிகரித்து வருவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.