புதுடெல்லி: விமானத்தில் தனியாகப் பயணம் செய்யும் குழந்தைகளுக்கான சேவைக் கட்டணத்தை ஏர் இந்தியா திடீரென உயர்த்தியுள்ளது.
குழந்தைகள் தனியாக விமானத்தில் பயணம் செய்யும்போது, பயணச்சீட்டுக்கான கட்டணத்துடன் குழந்தைச் சேவைக் கட்டணத்தையும் அவர்கள் செலுத்த வேண்டும்.
முன்னதாக, இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தனியாகப் பயணம் செய்யும்போது, அவர்களுக்கான சேவைக் கட்டணத்தில் ஏர் இந்தியா சலுகை வழங்கி வந்தது. இப்போது, அது நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனையடுத்து, குழந்தை நட்சத்திரமான இஸின் ஹேஷ், ஏர் இந்தியாவின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமது இன்ஸ்டகிராம் பக்கம் வழியாகக் கண்டனக் காணொளி வெளியிட்டுள்ளார்.
‘நிழல்’ என்ற மலையாளப் படம் மூலம் அறிமுகமான இஸின், ஹிரித்திக் ரோஷன், மாதவன், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
முன்னதாக, குழந்தைகளுக்கான சேவையைப் பயன்படுத்தி, தம் பெற்றோர் துணையின்றி, தனியாகப் பயணம் செய்துள்ளார்.
ஆயினும், அண்மையில் அவர் கேரளத்திலிருந்து துபாய் சென்றபோது குழந்தைச் சேவைக் கட்டணமாக அவர் ரூ.10,000 செலுத்தினார். முன்னதாக, ஐந்து முதல் 12 வயதுக்குட்பட்டோருக்கான இக்கட்டணம் 5,000 ரூபாயாக இருந்தது.
அத்துடன், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பயணச்சீட்டுக் கட்டணத்தில் வழங்கிவந்த சிறிய சலுகையையும் டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் இப்போது முழுமையாக நிறுத்திவிட்டது.