பாட்னா: பீகாரில் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
பீகாரில் மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் மாதம் 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஏறத்தாழ 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் 11ஆம் தேதியன்று 122 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) 5 மணியுடன் பிரசாரம் நிறைவுபெற்றது.
நிறைவு நாளில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பெருங்கூட்டணி சார்பில் ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
இரண்டாம் கட்டத் தேர்தலில் 136 பெண்கள் உட்பட 1,302 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
“20 மாவட்டங்களைச் சேர்ந்த 122 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் 3.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.95 கோடி பேர் ஆண்கள், 1.74 கோடி பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 943 பேர் உள்ளனர்.
“45,399 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். பதற்றமான சூழல் நிலவும் வாக்குச்சாவடிகளில் மட்டும் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடையும். இந்த வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேப்பாள எல்லை மூடப்பட்டுள்ளது,” என்று வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

